சிறகின்றி பறக்கும்
துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து
அழகுற்ற வான மதப்பில்..
நீண்டு வளைகிறது -
வண்ணம் நிறைந்ததொரு ஓவியம்,
தூரல் மழையின் சிலிர்ப்பில்
காது மடல்கள் அசைவுற -
சிதறும் மழைத்துளிகளின் ஓசை
இயற்கையின் ஜாலமாய்
உள்புகுகிறது இசை,
பசுமையை அள்ளிப் பருகும்
மரங்களின் அசைவுகளில் - காற்று
விளையாடி யுள்ளே -
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, 'கால கவிதை',
சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் -
காற்றினை சூடு கொள்ளைகொண்ட - இறுமாப்பை
உடைத்தெறிய -
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்,
முகமெல்லாம் அழுக்கு பூசி
பால்குடி வாசம் கழுகாத மழலையின்
பளிச்சென்ற வெள்ளை சிரிப்பில் - மதிமயங்கி
லயிக்கிறதொரு -
ரசனை பூத்த யதார்த்தம்,
வாசலில் முகம் சாய்த்து
வருகைக்குக் காத்திருக்கும் மனைவியின்
முகம் பார்த்த பரவசத்தில் -
லேசாய் அவளுதிர்த்த புன்னகையில் - பிறக்கிறதொரு
குடும்பத்தின்; வெற்றிப் புன்னகை,
மரக்கட்டைக்குள் எரிக்கையிலோ
மண்கொட்டி மூடும் பொழுதிலோ
மனசு மட்டும் கனவு சுமந்து -
கதறியழ இயலாதா உயிர் போன உடலின்
ஈரத்திலிருந்து நீங்கியிராத -
நீண்டதொரு நன்றிக்கான 'அம்மா' 'அப்பா' எனும்
தோற்றுப் போன அழைப்பு நிரூபிக்கிறது
அவர்கள் வளர்த்த அன்பை!