நாம் அடுத்து எழுத இருக்கும் வெண்தாழிசை...
1. மூன்றடிப் பாடல்; முதல் இரண்டடிகள் நாற்சீரடிகள்; மூன்றாம் அடி முச்சீரடி.
2. கடைசிச் சீர் தவிர எல்லாச்சீர்களும் காய்ச்சீர்கள் (மூன்றசைச் சீர்கள்).
3. ஒவ்வொரு அடியிலும் முதல் காய்ச் சீரை அடுத்து வரும் காய்ச் சீர் நிரையில் தொடங்க வேண்டும் (காய் முன் நிரை).
4. மூன்றடிகளிலும் ஒரே எதுகையில் அமைய வேண்டும்.
5. கடைசிச் சீர் ஓரசைச் சீர்; மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் அமைய வேண்டும்.
எடுத்துக்காட்டு :
பெற்றவளின் உரிமைகளைப் பிடுங்கிவிட்டு விரட்டியவன்
மற்றவரின் குறையுரையை மறைப்பதற்கு முயலுவதால்
உற்றபழி ஒழிந்திடுமோ ஒருங்கு.
இப் பாடலில், முதல் அடியில் முதல்சீர் – பெற்றவளின் > கூவிளங்காய்; முதல் சீர் நிரையில் தொடங்கவேண்டிய கட்டாயம் இல்லை.
இரண்டாம் சீர் – உரிமைகளைப் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
மூன்றாம் சீர் – பிடுங்கிவிட்டு > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
நான்காம் சீர் – விரட்டியவன் > நிரையில் தொடங்கிய காய்ச்சீர்.
இவ்வாறே, மற்ற அடிகளிலும் உள்ளதைக் காண்க.
கடைசிச் சீர், ஒருங்கு > ஓரசைச் சீர் ‘பிறப்பு’ என்ற வாய்பாட்டில் உள்ளது.
இன்னொரு எடுத்துக்காட்டு :
செந்தமிழ இனந்தன்னைச் சிறுமதியர் அழித்தொழிக்கப்
பந்தமிலா திவண்இருந்தே பழிசேரத் துணைபோனார்
எந்தமிழர் தலைவரெனல் இழிவு.
இவ்வாறமைந்த வெண்டாழிசைப் பாடலை எழுதுங்கள்.
எந்த ஐயம் தோன்றினாலும் தயங்காது கேளுங்கள்.
நீங்கள் விரும்பும் நல்ல கருத்தமைத்து எழுதுங்கள்.
(உதவியாக இருந்த ‘நற்றமிழ்’ மாத இதழுக்கு நன்றி.) - தமிழநம்பி
நீங்கள் விரும்பும் கருத்தமைய இவ்வகைத் தாழிசைப் பாடலை
எழுதுக. எளிய முயற்சியுடன் எழுதலாம்; மிகுந்த மகிழ்ச்சி தரும்.
tamilparks
@
gmail . com
என்ற முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்
வளரும்.......
நன்றி
தமிழநம்பி