தமிழ் தாத்தா சாமிநாத ஐயர்
தமிழ் தாத்தா என்று நாம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர் உ.வே. சாமிநாதய்யர். இவரை ஏன் இப்படி அழைக்கிறோம்.
செல்லரித்து, சிதைந்து, அழியும் தறுவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை சரிபார்த்து ஒழுங்குபடுத்தி அச்சிட்டு அழியாத கருவூலங்களாகத் தமிழ் மொழிக்கு அளித்தப் பெரியவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர்.
அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமலிருந்தால் பழந்ததமிழ் இலக்கியங்கள் பலவற்றை நாம் அடியோடு இழந்து போயிருப்போம்.
தஞ்சை மாவட்டதிலே பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறு கிரமத்திலே தமிழ்த் தாத்தா சாமிநாதய்யர் அவர்கள் 1855ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19ம் நாள் பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். அது பாட்டனார் பெயராக இருந்ததால் அப்பெயரிட்டு அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதிய அன்னையார் சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐயர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்றார்.
கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக பணிபுரிந்த போது தான் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
கடுமையான சிரமத்திற்கும் உழைப்புக்கும் பிறகு ஐயர் அவர்கள் 1892ம் ஆண்டு சிலப்பதிகாரத்தைச் சரிபார்த்து பதிப்பித்தார். தொடர்ந்து மணிமேகலை, புறநானூறு ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.
இதேபோன்று 1902-1904 ம் ஆண்டுகளில் ஐயர் அவர்களால் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும் பதிப்பிக்கப் பெற்றன.
ஐயர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பெற்றார்.
ஐயர் அவர்களின் அற்புதமான தமிழ்த்தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
"தமிழ்த் தாத்தா" எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் 1942ம் ஆண்டு நிறைவு எய்தினார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்று பேசுவதே கேவலம் என்று நினைக்கின்றனர் இந்தக் காலத்துப் பிள்ளைக்ள். இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
நன்றி தினமலர் சிறுவர்மலர்
-------------------------------------------------------------------------------- |